பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், நடிகர் யோகி பாபு நடித்த ஷூ திரைப்படத்தின் விநியோகஸ்தர் தரப்பு ஊழியர்களை, தயாரிப்பாளர் தரப்பு கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த “ஷூ” திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம்
14ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை கார்த்திக் என்பவர் தயாரித்துள்ளார். மதுராஜ் என்பவர் விநியோகம் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தயாரிப்பாளர் கார்த்திக் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதுராஜுக்கு விநியோகம்
செய்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி முதலில் 17 லட்சம் ரூபாய் மதுராஜ் தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் அளித்துள்ளார். ’ஷூ’ படத்திற்காக எதிர்பார்த்த விலை மதுராஜுக்கு கிடைக்காததால், கார்த்திக்கிடம் மீதமுள்ள பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் கார்த்திக்கிற்கும், விநியோகஸ்தர் மதுராஜுக்கம் இடையே பணத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ இரண்டாவது
தெருவில் விநியோகிஸ்தர் மதுராஜின் அலுவலகத்தில், தயாரிப்பாளர் கார்த்திக் தரப்பினர் பத்துக்கு மேற்பட்டோர் நுழைந்துள்ளனர். அங்கு பணிபுரிந்த கோபி, பென்சர் ஆகிய இரண்டு நபர்களை அடித்து தாம்பரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு கடத்தி வந்துள்ளனர். அங்கு அவர்களை காயப்படுத்தி அவர்களிடம் இருந்த ஏ.டி.எம் கார்டில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர். பின் அவர்கள் இருவரையும் அன்று மாலையே விடுவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பென்சர் வீடு திரும்பாததால், திரைப்படத்தின் விநியோகிஸ்தர் மதுராஜ், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான நாகராஜ், வினோத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தரப்பை சேர்ந்த பிரசாந்த், பாஸ்கரன், நந்தகுமார் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், கடத்தி பணத்தை பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளியான தயாரிப்பாளர் கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.