உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தட்டிச் சென்றது.
இந்த முறை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் அதே தீவிரத்துடன் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.13.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.60 கோடியும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது ஐசிசி. ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக ரூ.31.40 கோடியை அறிவித்துள்ள ஐசிசி, தரவரிசைப் பட்டியலின் படி ஒவ்வொரு அணிகளுக்கும் குறிப்பிட்ட தொகையை பிரித்து வழங்கவுள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் ஏற்கனவே விற்று தீர்ந்திருப்பதை அடுத்து, இந்த ஆண்டு இந்திய மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாகவே இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை கூட்டியுள்ளது.







