உலக தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, இன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், மொராக்கோ அணியிடம் வீழ்ந்தது.
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதியில் இரு அணியும் கோல் எதுவும் அடிக்காமல், 0 – 0 என்று சமனில் இருந்தன. விறுவிறுப்புடன் தொடர்ந்த இரண்டாவது பாதியின் 73வது நிமிடத்தில், மொராக்கோ அணி வீரர் அஃப்தெல் ஹமீது சபிரி கோல் அடித்து ஆட்டத்தை சூடுபடுத்தினார்.
ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் சகாரியா அபுக்லால் கோல் அடித்து மொராக்கோ அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதி வரை போராடிய பெல்ஜியம் அணியால் ஒரு கோல்கூட அடிக்க இயலாமல் போக, 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி அபார வெற்றி பெற்றது. உலகளவில் 2வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்த மொராக்கோ, குரூப் எஃப் பிரிவில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக ஜப்பான் அணி, கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. ஜப்பான் அணி முதல் போட்டியில் பலமான ஜெர்மணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. இதனால் இந்த போட்டியின்மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. முதல் பாதி 0-0 என்று சமனில் முடிந்தது. பரபரப்புடன் நடைபெற்ற இரண்டாவது பாதியின் 81வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் கெய்ஸர் புல்லர் கோல் அடித்தார். இதையடுத்து ஜப்பான் அணி கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் போக, 1-0 என்ற கணக்கில் கோஸ்டா ரிகா அபார வெற்றி பெற்றது.