செஸபில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸென்னை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
இந்த ஆண்டில் இதுவரை கார்ல்ஸென்னை இரண்டாவது முறையாக பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா (16 வயது), கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் நார்வேயைச் சேர்ந்த கார்ல்ஸென்னை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், செஸபில் மாஸ்டர்ஸ் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. வரும் 26-ஆம் தேதி வரை அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கார்ல்ஸென்னை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். முன்னதாக, பிரக்ஞானந்தாவின் நாற்பதாவது காய் நகர்த்தலின்போது ஆட்டம் டிரா ஆவதாக இருந்தது. எனினும், கார்ல்ஸென்னின் தவறான காய் நகர்த்தல் காரணமாக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இருப்பினும், புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. கார்ல்சென் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சீன வீரர் வெய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த வாரத்தில் தனக்கு தேர்வுகள் இருந்தாலும், இந்த விளையாட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று பிரக்ஞானந்தா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.