மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 298 ரன்கள் குவித்துள்ளது.

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தோல்வியடைந்ததை அடுத்து இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.  அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிபோட்டி இன்று நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடை பெறுகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்ர். அதன்படி  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில்  ஷபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் விளாசினர்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அயபோங்க காக்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.