சென்னையில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு நிர்பயா திட்ட நிதியின்கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கைக் கழுவும் திரவம், உடை மாற்றும் சிறிய அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.







