போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்பட்டபோது, தந்தையின் நினைவாக இருந்த வாகனத்தை இளம்பெண் தனி ஆளாக போராடி தனது வாகனத்தை ஏலம் எடுத்துள்ளார்.
சேலம் மாநகர மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார், கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தியவர்கள், வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் நேற்று ஏலம் விடப்பட்டன. அதன்படி, சேலம் மாநகர மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 106 வாகனங்களும், மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 127 வாகனங்களும் ஏலம் விடப்பட்டன. சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு போட்டி போட்டிப்போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் எலத்தில் கலந்துகொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை யாரும் ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்று உருக்கமுடன் தெரிவித்த அவர், தனது தந்தை நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகனம், தனது சகோதரனுக்கு தேவை என்பதால் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அந்த இரு சக்கர வாகனம் ஏலத்திற்கு வந்தபோது அதனை 5500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டிலுள்ள நகையை அடகு வைத்து தந்தையின் நினைவாக உள்ள இருசக்கர வாகனத்தை ஏலம் எடுத்ததாக உருக்கமுடன் தெரிவித்தார். தனி ஆளாக ஏலத்தில் கலந்துகொண்டு தனது தந்தையின் நினைவாக இருந்த வாகனத்தை ஏலத்தில் எடுத்த இவரின் செயல் அப்பகுதியினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.