மகாராஷ்டிராவில் பெண் ஒருவருக்கு அடுத்தடுத்த சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அங்கு அவருக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் 3 தடுப்பூசி டோஸ்கள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் இதுபற்றி புகார் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் கணவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது மனைவி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக தடுப்பூசி மையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து 3 ஊசிகள் போடப்பட்டுள்ளது. அவருக்கு தடுப்பூசி குறித்த நடைமுறைகள் எதுவும் தெரியாததால், இதுகுறித்து அங்கு எதும் தெரிவிக்காமல் என்னிடம் வந்து தெரிவித்தார். தடுப்பூசி செலுத்திய பின் அவருக்கு காய்ச்சல் இருந்தது. ஆனால், மறுநாள் காலையில் காய்ச்சல் குறைந்து விட்டது. இப்போது அவர் நன்றாக உள்ளார்” என தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே தெரிவித்ததாவது:- மருத்துவகுழுவினர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை பரிசோதனை செய்தனர். அவர் நலமாக உள்ளார். இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளோம் என கூறினார்.







