விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் கடைசியாக கருதக்கூடாது; பிரதமர் மோடி

விளையாட்டு போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் கடைசியாக கருதக்கூடாது என என 36வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். தேசிய விளையாட்டு போட்டிகள் கடைசியாக 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.…

விளையாட்டு போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் கடைசியாக கருதக்கூடாது என என 36வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

தேசிய விளையாட்டு போட்டிகள் கடைசியாக 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 36வது போட்டி கோவாவில் 2020-ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது குஜராத்தில் தொடங்கியுள்ளன. அகமதாபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார்.

அகமாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரா பட்டேல், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இவர்களை தவிர தொடக்க விழாவில் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா, பி.வி. சிந்து, ரவிக்குமார் தஹியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில், மக்கள் தொகையில் அதிகமாக இளைஞர்களை கொண்ட நாட்டிற்கான மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை நடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விளையாட்டு வீரர்கள் 100-க்கும் குறைவான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றனர். ஆனால் இப்போது, ​​அவர்கள் 300க்கும் மேற்பட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு மந்திரத்தை கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் போட்டியில் வெற்றி பெற விரும்பினால், அர்ப்பணிப்புடனும் தொடர்ச்சியுடனும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டில் தோல்வியும், வெற்றியும் கடைசியாக ஒருபோதும் கருதக்கூடாது. இந்த விளையாட்டு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.