கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.    கோவை பீளமேடு பகுதியில் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி…

கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

 

கோவை பீளமேடு பகுதியில் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவினர் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை குறித்தும் இழிவாகப் பேசினார்.

போலீஸ் காவல் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் காலை வைத்துப் பாருங்கள் என மிரட்டல் விடுக்கும் விதமாகவும், பெரியார் குறித்தும் அவதூறாகப் பேசி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் பெரியார் திராவிட கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை பீளமேடு போலீசார் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் அவர் மீது கலகத்தைத் தூண்டுதல், வேண்டுமென்றே ஒரு நபரை அவமதித்து எரிச்சல் ஊட்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ததை அறிந்த கட்சி தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை உடல் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது காரை விடாமல் வழிமறித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். பீளமேடு காவல் நிலையம் முன்பாக மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி உத்தம ராமசாமி சிவராம் நகர்ப் பகுதியில் உள்ள நீதிபதி செந்தில் ராஜன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் ராஜா, பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கோவை பாஜக மாநகர பாலாஜி உத்தம ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் 15 நாட்கள் பீளமேடு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து மாவட்ட நீதிபதி ராஜசேகர் ஜாமீன் வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.