நீலகிரி அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக இடம் பெயா்ந்து மழவன் சேரம்பாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இதனால், எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், குடியிருப்புகளுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கவும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் இரவு நேரங்களில் யாரும் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் வனத்துறையினர் சார்பில் கிராம மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
—-கா. ரூபி







