மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்துவிட்டு கணவனும்உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையை உலுக்கியிருக்கிறது.
சென்னையை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர்கள், 41 வயதான பிரகாஷ், காயத்ரி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பிரகாஷ் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி, காயத்ரி அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி உள்ளனர். வழக்கம் போல், பிரகாஷ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை, பக்கத்து வீட்டுகாரரர் ஒருவர் பிரகாஷின் வீட்டருகே சென்ற போது, கதவு திறக்கப்பட்டு, வீட்டின் தரையில் ரத்தக்கரை படிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் அந்த நபர்.
சம்பவ இடத்திற்கு வந்த, காவல்துறை அதிகாரிகள், வீட்டினுள் நுழைந்து பார்த்த போது, பிரகாஷ், காயத்ரி, அவரது மகள், மகன் ஆகியோர், மரம் அறுக்கப் பயன்படுத்தப்படும் கருவியால் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர் கடிதம் ஒன்றையும், 3 அரை லட்சம் கடன் பத்திரத்தையும், கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தங்களுடைய உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை எனவும், இது தாங்களாகவே எடுத்த முடிவு எனவும் எழுதப்பட்டிருந்தது.
தொடர் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி, ஆன்லைன் மூலம் மரம் அறுக்கு இயந்திரத்தை வாங்கியிருக்கிறார் பிரகாஷ். இரவு 11 மணியளவில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர்கள், மயங்கிய பிறகு, மரம் அறுக்கும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் தானும் அதே இயந்திரத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு பிரகாஷ் உயிரை மாய்த்துக் கொண்டள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறந்து கிடந்த உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். கடன் தொல்லையால் இந்த உயிரிழப்பு நடந்ததா? அல்லது கொலையா? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், இறந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள், உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து முழு விசாரணைக்கு பிறகே இந்த சம்பவத்தில் மர்மம் விலகும் என தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.