சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:
“இது புதிய நடைமுறை கிடையாது. மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூர் கோயிலில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, பல கோயில்களில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போதிலிருந்து செல்போன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோயில்களில் செல்போன்களுக்குத் தடை என்பது முன்பே இருந்தது. அதற்கான கவுண்டர்கள் 52 முக்கிய கோயில்களில் இல்லாததால், அதனை கொண்டு வந்துள்ளோம்.
வசூலிக்கப்படும் அந்த ஐந்து ரூபாய் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களுக்கும், கோயில்களுக்கு வரக்கூடிய ஏழை, எளிய மக்களின் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஐந்து ரூபாய் வசூலிப்பது குறித்து தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது புதிய நடைமுறை இல்லை. கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட இந்த நடைமுறை இருக்கிறது.
குற்றச்சாட்டு வைப்பவர்கள் அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள். கோயில்கள் அரசியல் செய்யும் இடம் கிடையாது. மேலும், கூட்டநெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் விதமாக, விசேஷ நாட்களில் மொபைல் வாங்கி வைக்கும் நடைமுறை வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.




