கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததால் திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை கொரோனா பரவலைக் காரணம் காட்டி ரத்து செய்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உள்ளிட்ட கட்சிகள், முதல்வர் நடத்தும் பிரச்சாரங்களால் கொரோனா பரவாதா எனவும் கேள்வி எழுப்பின.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் திமுக பிரமுகர் இல்ல திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசாங்கம்தான் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை மறுக்கவில்லை எனவும், அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் திமுக கூட்டுவதாகவும் குறிப்பிட்டார். இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை உள்ளதாகக் கூறிய மு.க. ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.







