“அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்?” – அண்ணாமலை கேள்வி

அடிப்படை வசதிகளைக் கூட செய்து மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை.

சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்? அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்னையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது.

அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு முதல் படியாக, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் அமைந்திருக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அனைத்து சட்டக் கல்லூரி மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள்”

இவ்வாறு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.