ராஜகுருவுக்கு ஏன் அரசு பதவி…? – முதலமைச்சர் விஜய் மீது பிரேமலதா கடும் தாக்கு…!

குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் புகாருக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினால் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது ;

அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை என்று கூறும் முதலமைச்சர் விஜய் தனது ராஜகுருவான ரிக்கி ரத்தன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக அமர்த்தி இருக்கிறார். ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும. அரசு உயர் பதவியில் அமர்த்துகிறீர்கள் என்றால், வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தை காட்ட விரும்புகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் புகாருக்கு விஜய் முதலில் பதிலளிக்க வேண்டும். முகத்தை மூடிக்கொண்டு யாரையும் பார்க்க மாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். ஆனால் அவரது வீட்டிற்கு முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார் என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.