தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரை சந்தித்தாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் தொடர்பான செய்தி வெளியான பின்னர் தான் டெல்லி வரவில்லை என்றும், டெல்லிக்கு வந்த பின்னர் தான் அதுபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளன என தெரிவித்தார். அதேவேளையில், பதவி கேட்டு இதுவரை காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது என்றும் பதவி கிடைத்த பின்னர் பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது என்றும் அவர் கூறினார்.
அகில இந்திய தலைவர்களுடனான இன்றைய சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்தோ, நிர்வாகிகள் நியமனம் குறித்தோ பேசவில்லை எனவும், மாறாக அரசியல் சூழல் குறித்து விவாதித்தாகவும், குறிப்பாக பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராக எவ்வாறு கூட்டணியாக செயல்படுவது என்பது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தனது பொறுப்பை நீட்டித்தாலும் மகிழ்ச்சி என்றும், அதேவேளையில் வேறு ஒருவரை தலைவராக நியமித்தாலும் தனக்கு மகிழ்ச்சியே என கூறினார். மேலும் தனக்கு எந்தவொரு பணி வழங்கப்பட்டாலும் அதனை தான் மகிழ்வுடன் செய்வேன் எனவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய அழகிரி, தமிழ்நாட்டில் தற்போது உள்ள காங்கிரஸ், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்பை விட அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கூறினார்.
ஆனால் அதேவேளையில் தேர்தலின்போது அதிகப்படியான தொகுதிகளை பெற்றுள்ளோமா என்பதை விட, கிடைத்த தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமா என்பது தான் முக்கியம் எனவும், தமிழ்நாட்டில் ஆன்மீக நம்பிக்கை அதிகமாக இருந்தாலும், சனாதன சக்திகளுக்கு இடமில்லை எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.