ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது சுட உத்தரவிட்டவர்கள் யார்?-சீமான் கேள்வி

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் நாம் தமிழர்…

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலை வழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியுமென 14 உயிர்களைப் பறித்த அரசப் பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கையானது நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.

ஒருநபர் ஆணையத்தின் விசாரணைக்காக நானும் நேர் நின்று, இதில் ஆளும் வர்க்கம் நிகழ்த்திய அநீதிகளையும், அநியாயங்களையும் எடுத்துரைத்த நிலையில், இன்றைக்கு தூத்துக்குடி மக்கள் பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் விதமாக வெளிவந்திருக்கும் ஆணையத்தின் அறிக்கையை உளப்பூர்வமாக வரவேற்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டது அன்றைய அதிமுக அரசு.

பேரணி நடைபெற்ற இடத்திற்கு அப்பால் தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார் என்பதுமான இரு சம்பவங்களே, அன்றைய அரசு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை இதுவென்பதை ஐயத்துக்கு இடமின்றி வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப் பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, காக்கை, குருவியைப் போல தூத்துக்குடி மக்களைக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத் துப்பாக்கியோடு எப்படிக் களத்துக்கு வந்தார்கள்? துப்பாக்கிச் சூடு நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?

கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது. துப்பாக்கிச்சூட்டை கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்? போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வேண்டிய தேவையென்ன வந்தது?

இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்று நோக்கிக் கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசு நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது.

14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய காவல்துறை அமைச்சகத்தைத் தன்னகத்தே வைத்திருந்த அன்றைய முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும், போராட்ட நாளுக்கு அடுத்த நாளும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதே அது எப்படி? அதனையும் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டாரா?

வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்கள் என்பதை அவரும் வழிமொழிகிறாரா? காவல்துறை அமைச்சகத்தைக் கொண்டிருக்கிற மாநிலத்தின் முதல்வருக்கே தெரியாது காவல்துறையினருக்குத் துப்பாக்கிச்சூடு அனுமதியளிக்கிற அளவுக்கு அதிகாரமிக்கதா வட்டாட்சியர் பதவி?

துப்பாக்கிச்சூட்டுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லையெனக் கூறுவார்களென்றால், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உத்தரவு வந்ததென்கிறார்களா? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வருக்குத் தெரியாது, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலாவது துப்பாக்கிச்சூடு நடத்திவிட முடியுமா? ஆக திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?

நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையில், குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; காவல்துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது ஆணையத்தின் அறிக்கை.

ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அனைவரையும் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த முன்வர வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்  என்றார் சீமான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.