இமாச்சல் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற போட்டியில் மூன்று பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த மாதம் நவம்பர் 12ந்தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் வென்று அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் வெற்றியை இமாச்சல் பிரதேசத்திலும் பிற மாநிலங்களிலும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் மூன்று பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
1) பிரதீபா சிங்
இமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில காங்கிரசின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தவருமான வீரபத்திர சிங்கின் மனைவிதான் பிரதீபா சிங். தற்போது இமாச்சல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பிரதீபா சிங் உள்ளார். மக்களவை உறுப்பினராக உள்ள பிரதீபா சிங், தனது கணவர் வீரபத்திர சிங் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பாடுபட்டார். இமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஆவதற்கு பிரதீபா சிங்கிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
2) சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுக்விந்தர் சிங் சுகு கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராகவும் இருந்து பிரச்சார வியூகங்களை வகுத்தார். கட்சியின் வெற்றிக்கு இவரது பிரச்சார வியூகங்களும், செயல்பாடுகளும் முக்கிய காரணம் என பாராட்டப்பட்டு வரும் நிலையில் இமாச்சல் பிரதேச முதலமைச்சர் அரியணையில் அமர இவருக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
3) முகேஷ் அக்னிகோத்ரி
ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏவாக இருந்து அரசியல் அனுபவம் பெற்ற முகேஷ் அக்னிகோத்ரி, கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலேயே காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை இவரும் இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.