அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று மாலை கூடுகிறது.
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உள்பட, 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், திமுக சார்பில் போட்டியிட உள்ள 3 வேட்பாளர்களை அண்மையில் திமுக அறிவித்தது. அதில், 1 இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கி இருந்தது.
இந்நிலையில், மீதமுள்ள 2 இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு உயர்மட்டக் குழுக் கூட்டம் இதற்காக கூட இருப்பதாக சொல்லப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு’
மாநிலங்களவை எம்.பி பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி. சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 50 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று மாலைக்குள் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








