2028ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த விழாவில் 45 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் 3 வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளில் ஜைக்கா நிறுவனம் சார்பில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியானது.
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முன்முதலீட்டு பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீதமுள்ள நிதியை அக்டோபர் 26க்குள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கையில் 2023ம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனவும், இதனை தொடர்ந்து 2026ம் ஆண்டு வரை கட்டிட பணிகள் நடைபெற தொடங்கி பின்னர் 2028ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் எவ்வாறு அமைய உள்ளது. எது போன்ற அமைப்பில் உள்ளது போன்ற வரைபடங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.