பிஎம் கேர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4வது நாளான இன்று, கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், “கொரோனா தொற்றை எதிர்க்கொள்ள பி.எம் கேர் நிதி எவ்வளவு திரட்டப்பட்டது, செலவு செய்யப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவையில் அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றை எதிர்க்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு பிடித்தம் செய்தது. ஆனால் இந்த பிடித்தம் செய்யப்பட்ட நிதியிலிருந்து மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல பிரதமர் பெயரில் (பிஎம் கேர்) நிதி திரட்டப்பட்டது. ஆனால் எவ்வளவு நிதி திரட்டப்பட்டது, அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக மேலெழுந்துள்ளது. எனவே அரசு இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும். அல்லது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கொரோனாவுக்கு பலியான 4 லட்சம் குடும்பத்திற்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
பேரிடரில் உயிரழந்தோருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கலாம் என சட்டத்தில் இடமிருக்கிறது. எனவே கொரோனா தொற்றை இயற்கை பேரிடராக கருதி உயிரழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
இரண்டாவது கோரிக்கையாக, செங்கல்பட்டில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை அரசு கட்டியுள்ளது. ஆனால் இந்நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே மேலும் சிறிது முதலீடு செய்து இதனை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அதேநேரத்தில் ஓமிக்ரான் தொற்றை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.