நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்டம் குறித்து 2ஆவது முறையாக பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டாத என்றும், நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் விளக்கம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல. நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை.
நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என ஆளுநர் மாளிகை
தெரிவித்ததாக மே 4-ஆம் தேதி முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல்
அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா