கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்றும் கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி
வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்னிந்திய கோழிப்
பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் மற்றும் கோழி வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளை
சேர்ந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், கோழிப் பண்ணையாளர்கள் ,
முட்டை மற்றும் கோழி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:
முட்டை கோழிக்களுக்கான தீவன மூலப் பொருட்களான மக்கா சோளம், சோயா,
சூரியகாந்தி புண்ணாக்கு, தவிடு ஆகிய அனைத்து பொருட்களும் கடந்த 2 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு கடுமையாக விலை அதிகரித்துள்ளது. அதே சமயம் கோழிகளுக்கு தேவையான மருந்து பொருட்கள், தொழிலாளர்களின் கூலி, டீசல் உள்ளிட்ட அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு நிகராக முட்டை விலையை உயர்த்தாவிட்டால் பண்ணைகளை தொடர்ந்து நடத்த முடியாது.
கடந்த 4 மாதங்களாக முட்டை விலை ரூ.4 க்கு குறைவாக விற்பனை செய்ததால் கோழிகளுக்கு தீவனங்கள் போட முடியாமல் கோழிகள் விற்பனை செய்யப்பட்டன. தீவன
விலை உயர்வால் கோழி குஞ்சுகள் பண்ணைகளில் விடுவது குறைக்கப்பட்டதால் முட்டை
உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தான் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
நுகர்வும் அதிகரித்துள்ளதே முட்டை விலை உயர்வுக்கு காரணம்.
ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ.4.80 காசுகள் செலவாகிறது. பண்ணையாளர்கள் வங்கியில் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றால் முட்டை விலை ரூ.8 வரை விற்பனை செய்தால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை லாபகராமாக
நடத்த முடியும். கோழித்தீவன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீதம்
ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி கட்டுவதன் மூலம் ஒரு இலட்சம் கோழி வைத்துள்ள பண்ணையாளர்கள்
ஆண்டுக்கு ரூ.20 இலட்சம் செலுத்துகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கும் டெண்டரில் கோழிப்பண்ணையாளர்கள் யாரும் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போதைய ஆட்சியில் சத்துணவு முட்டை டெண்டரில் கோழிப் பண்ணைகள் கலந்து கொள்ள வழிவகை செய்துள்ளார் தமிழக முதல்வர். அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் சிங்கராஜ்.