மாணவி உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

கனியாமூர் வழக்கை விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி…

கனியாமூர் வழக்கை விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்.

மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்; காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கள்ளக்குறிச்சியில் என்ன நடக்கிறது?

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர். அதிரடி படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.