ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாஜக ஆட்சியில் எதுதான் சரியாக செல்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன்கருதி எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் நகர்ந்து போகிறார். இதனால் தான் ஆளுநர் தேவையில்லை என்று சொல்கிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது, அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? ஜனநாயகம் எங்கு உள்ளது?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பாஜக ஆட்சியில் எதுதான் சரியாக செல்கிறது. எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை ஒரு விதமான பதற்றத்திலேயே வைத்துள்ளனர். அனைத்தும் ஆதார் தான் என்றால் தேசிய குடியுரிமைச் சான்றிதழ் எதற்காக? பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் சரியான பாதையில் செல்கிறதா?
தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்திலிருந்து வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி
எதிர்த்து வருகிறோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் மக்களுக்கான
அரசு. தேர்தல் நேரத்தில், நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை
வழங்குகிறோம் என்று அறிவிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை முழுமையாக வழங்குவதில்லை. இதுவும் ஒருவித கையூட்டு தான். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் நாடே தலைகீழாக மாறிவிடும். தமிழ்நாட்டை சிங்கப்பூராக மாற்றிவிடுவார்.
மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள். பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும். பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது. இந்த விவகாரம் அநாகரீகமானது. வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்கு ஆளுநரே வேண்டாம். ஏழு பேர் விடுதலைக்கு என்னென்ன பாடுபடுத்தினார்கள். ஆளுநரின் கையெழுத்து எட்டுகோடி மக்களின் தலையெழுத்தை எழுதுவதா?
பாஜக பெரிய கட்சி என்று கூறுகிறார்கள். அவர்களால் தனித்து நிற்க முடியுமா? தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க முடியுமா? அப்படி இருக்கும்பொழுது, எங்கு தமிழை வளர்க்கிறீர்கள். பாராளுமன்றத்தில் தமிழ் பேச
உரிமை உள்ளதா? பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாட்டில் 22 மொழிகள்
தேசியமொழியாக இருந்தால் என்ன பிரச்னை? ஆட்கள் மாறும், ஆட்சி மாறும், அமைப்பு மாறாது.
மின்சாரத் துறையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதமாதம் கணக்கு எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்த பிறகும், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தான் கணக்கு எடுக்கப்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. அதில் வெற்றி பெறுவது மட்டும் தான் எங்களது இலக்கு.
புதிய கல்விக்கொள்கையை நாம் எதிர்க்கிறோம். ஆனால் திமுக ’இல்லம் தேடி கல்வி’
என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது. திமுக எட்டு வழிச்சாலையை எதிர்த்தது. ஆனால் தற்பொழுது பயண நேரம் குறைப்பு சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயற்சி செய்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை வேறு இடத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட தேதியில் மதுரையில் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்” என்று தெரிவித்தார்.