30 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன ?

அதிமுகவின் பொதுச்செயலாளராகி விட வேண்டும் என இபிஎஸ் ஒரு பக்கமும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் மறுபக்கம் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் அக்கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன என்பதை விளக்கும் ஓர் அலசல் ரிப்போர்ட்.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் என்று பெருவாரியான உறுப்பினர்கள் தீவிர ஆதரவு அளித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இறந்த பின் அதிமுகவில் நடக்காத திருப்பங்கள் கிடையாது. அப்படி இருக்க, அதிமுகவில் வரும் நாட்களில் எவ்வளவு பெரிய திருப்பங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம்.

அந்த வகையில் பெருவாரியான நிர்வாகிகள் பலம் இருந்தாலும் கூட வருகிற ஜூலை 11ம் தேதி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவதில் பெரிய சிக்கல் இருப்பதாகவே அதிமுக சட்ட பிரிவை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். எடப்பாடிக்கு நிர்வாகிகள் ஆதரவு இருக்கிறது. இருந்தாலும் சட்ட ரீதியாக அவருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவரின் அணி தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் இப்போது அவருக்கே எதிராக உள்ளது என்கிறார்கள். இதனால் ஓபிஎஸ் தரப்பு குஷியாக இருப்பதாக தெரிகிறது.

இதில் எடப்பாடி தரப்பு செய்த தவறு என்பது 23 தீர்மானங்களை நிராகரித்தது.  தீர்மானங்களை படித்து காட்டிய பின்பே அதை நிராகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் அவசரப்பட்டு நிராகரித்ததால் அது சட்ட ரீதியாக இபிஎஸ் தரப்பினருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

இந்த தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பதால் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் செப்டம்பர் வரை இதற்கு அவகாசம் உள்ளது. அதற்குள் எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றலாம். எனவே ஓபிஎஸ் இப்போதும் ஒருங்கிணைப்பாளர்தான். பதவி இன்னும் காலியாகவில்லை என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு சட்ட நிபுணர்கள்.

அப்படி இருக்கும் போது இப்போதும் ஓபிஎஸ்தான் பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழு அறிவிப்பு அவை தலைவர் உசேன் மூலம் வெளியிடப்பட்டது சட்ட ரீதியாக செல்லாது என்பது ஓபிஎஸ் தரப்பு வாதமாக உள்ளது. ஆனால் எடப்பாடி தரப்பினர் இதற்கு வைக்கும் வாதத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கோரிக்கை மனு கொடுத்தார். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு, பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி நடத்த சொல்லி இருக்கின்றனர். அந்த மனுவைத்தான் சண்முகம் கொடுத்தார்.

அதனால் பொதுக்குழுவை ஓபிஎஸ் கூட்ட வேண்டியது இல்லை. அவைத்தலைவர் கூட்டினால் போதும் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தாலும் சட்ட விதிப்படி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம் என்பது அதிமுகவின் சட்ட விதியாகும்.சரி பொதுக்குழுவை பொதுக்குழு உறுப்பினர்களே கூட்டலாம் என்று சொல்கிறார்கள். அப்படியே பார்த்தாலும் கடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர்.

இதில் முதல் தீர்மானமே கழகத்தின் அனைத்து தேர்தல்களுக்கும், அதாவது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட , ஒன்றிய, பொதுக்குழு தேர்தல் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல்களுக்கும் ஒப்புதல் வழங்குவது தொடர்பான தீர்மானம் ஆகும். இந்த தேர்தல் ஒப்புதல் தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் பதவி இழக்கிறார்கள். இதனால் அவர்கள் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கடிதமும் சட்ட அங்கீகாரம் இல்லாமல் உள்ளது என்பது ஓபிஎஸ் தரப்பு வாதமாக உள்ளது. இதற்கிடையே பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறியிருப்பது எடப்பாடி தரப்பினருக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் 23 தீர்மானத்தை ரத்து செய்ததன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தமாக பதவி இழக்கிறார்கள். எடப்பாடி தரப்பினர் இவர்கள் பதவி இழக்கவில்லை என்று வாதத்தை வைக்கிறார்கள். அப்படி என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் பதவி இழக்கவில்லை. அவர்களும் பதவியில் தொடர்வார்கள். எனவே ஒருங்கிணைப்பாளருக்கே பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் உள்ளது. கிட்டத்தட்ட இடியாப்பம் போன்ற சட்ட சிக்கல் எடப்பாடி தரப்பிற்கு உருவாக்கி உள்ளது என்பது ஓபிஎஸ் தரப்பு வாதமாக உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த தீர்ப்பில் கூட நீங்கள் என்ன தீர்மானத்தை வேண்டுமானால் கொண்டு. வாருங்கள். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்று முறையில் ஓபிஎஸ் வரைவு தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இதனால் ஒற்றை தலைமை தீர்மானத்தை அதாவது பொதுச்செயலாளர் தீர்மானத்தை கொண்டு வர ஓபிஎஸ் அனுமதிக்க வேண்டும். இந்த உயர் நீதிமன்ற உத்தரவை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். எனவே அதிமுக பொதுக்குழு அதை செய்யாது. எனவே இதை தடுக்க எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் பெரும் சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். நீண்ட சட்டபோராட்டத்திற்கு பிறகு எடப்பாடி தரப்பிற்கே அதிமுக செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஓபிஎஸ் கட்சியை விட்டு முழுமையாக ஒதுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading