31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலக்கடலையில் உயர்மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன?

நிலக்கடலையில் உயர்மகசூல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை முக்கியமான பயிராகும். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 4 இலட்சம் எக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 1970-ஆம் ஆண்டுகளில் எக்டருக்கு சுமார் 1,000 கிலோ என்றிருந்த நிலக்கடலை உற்பத்தித்திறன் தற்போது 2,980 கிலோவாக உயர்ந்து, நிலக்கடலை உற்பத்தித்திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடம் வகிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலக்கடலை பொதுவாக சித்திரை, மார்கழி, தைப் பட்டத்தில் இறவைப் பயிராகவும், ஆடிப்பட்டம் மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரிப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 3.54 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மார்கழி, தைப் பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக் கடலை வளர்ச்சி, பூப் பருவம் மற்றும் விழுது இறங்கும் பருவத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாக மழை பெய்துள்ளது. அதில், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஜிப்சம் இடுதல்: 40-45 வது நாளில் இரண்டாவது களை எடுத்த பின்பு, எக்டருக்கு 200 கிலோ ஜிப்சம் உரத்தை செடிக்கு அருகில் இட்டு, நன்கு செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பூக்கள் விழுதாக இறங்கி, காய் பிடிப்புத் திறன் கூடி, நிலக்கடலை மகசூல் அதிகரிக்கும்.

2. நிலக்கடலை ரிச் பூஸ்டர் தெளித்தல்: எக்டருக்கு 5 கிலோ ரிச் பூஸ்டரை 500 லிட்டர் நீரில் கலந்து நிலக்கடலை பூக்கும் தருணத்தில் இலை மீது தெளித்தால், அதிக எண்ணிக்கையில் காய் பிடிக்கும்.

3. தேவைக்கேற்ப நீர்ப் பாசனம்: நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெற நீர் நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. முளைப்பு, பூத்தல், காய் உருவாதல் ஆகிய பருவங்களில் நீர்ப் பாசனம் இன்றியமையாததாகிறது.

4. மழை நீர் தேங்கினால் செய்ய வேண்டியது: தற்போது மாநிலத்தில் சில மாவட்டங்களில் வழக்கத்துக்கு மாறாக மழை பெய்துள்ளதால் நிலக்கடலை வயலில் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, இவ்வாறு மழைநீர் தேங்கினால் வயலுக்கு ஊடாக வடிகால் வாய்க்கால் அமைத்து உடனடியாக மழைநீரை வடித்துவிடவேண்டும்.

5. பூச்சி தாக்குதலுக்கு மேற்கொண்டியது: நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் தென்பட்டால், புழு இரண்டு அல்லது மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்து, இலையின் திசுக்களுக்கிடையே ஊடுருவிச் சென்று பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து விடும். இதற்கு ஊடுபயிராக கம்பு பயிரை ஏழு வரிசைகளுக்கு இடையில் பயிர் செய்தால் சுருள்பூச்சி தாக்குதலை குறைத்திடும். எக்டருக்கு 12 விளக்குக்கவர்ச்சி பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.

எனவே, நடப்புப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்காணும் தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து அதிக மகசூல் பெற்றிடுமாறும், மேலும், கூடுதலாக தகவலுக்கு, தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அதில், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading