மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன. இதையடுத்து, 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 22 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இந்த பகுதியில், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றதால், கடும் போட்டி நிலவுகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே தேர்தல் நடைபெற்ற போதும் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
கூச் பிஹார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வன்முறையின்போது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, கூச் பிஹார் மாவட்டத்துக்கு, அடுத்த 72 மணிநேரத்திற்கு அரசியல் தலைவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. வன்முறைக்கு இடையிலும், 4ஆம் கட்ட தேர்தலில், 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.