நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாநிலத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் நாளை முதல் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

மாநிலத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் நாளை முதல் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை 2023 ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுகாதாரப்பேரவை பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததாகவும், மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் உலக அளவில்
தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் , இந்தியா மட்டுமில்லாமல் மீண்டும் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உயர்ந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவாருக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் பரிசோதனை செய்தால், அதில் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இருந்தாலும், சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான், நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கூறினார்.

இப்படி சொல்வதன் மூலம் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம் கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால், முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.