சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன், டாக்டர்.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கு உள்ள மேடையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உறுதிமொழி எடுத்தார். அதில், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அந்த உறுதிமொழியில் இடம்பெற்றிருந்தது.
தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.