சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும் எனவும், இந்து மக்களிடையே உள்ள இயல்பான நம்பிக்கையை, அரசியல் ஆதாயமாக மாற்றும் செயல் திட்டத்தை பாஜக தீட்டிவருகிறது எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய கட்சித் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:
“பொதுமக்களுக்கு கடன் கொடுத்து அவர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திட்டம் ஆபத்தானது. சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து எந்த மாநிலமும் போராட்டம் நடந்தவில்லை. தமிழ்நாட்டில் தான் முதலில் நடக்கிறது.இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். பாஜகவின் ஆத்திரம் திமுக மீது தான். அதனை ஒரு தனி வேலையாக பார்த்து வருகின்றனர். சனாதன தர்மம் மூலம் இந்துக்களை இழிவுபடுத்தி வருகிறார்கள். இந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறப்பின் அடிப்படை கருத்து கொண்டது தான் சனாதன தர்மம்.
உதயநிதி தலையை எடுத்தால் 1 கோடி என்கிறார்கள், அதுவே ஒரு மிரட்டல் தான். இந்த திட்டம் மூலம் அவர்கள் தொழில்களை மேம்படுத்த நினைக்கிறார்கள். பள்ளிக்கு போகாதவர்கள் கூட ராமன் யார் லட்சுமணன் யார் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அவர்களுடைய கதை கிராமங்களுக்கு சென்றுள்ளது. ஏகலைவனின் கட்டை விரல் வெட்டுவது தான் சனாதனத்தின் தர்மம்.
இந்த சனாதனம் பற்றி தற்போது தேசிய அளவில் பேசப்படுகிறது. இதனை நாம் பெருமையாக நினைப்போம். இதனை பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். திமுகவின் தலைவர் மகன் உதயநிதி, அது தான் அவர்கள் பிரச்னை. அதனால் தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள். இந்தியா கூட்டணியை யாராலும் ஒழிக்க முடியாது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை. அது தான் உண்மை.
இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். எல்லோருடைய நோக்கமும் அது தான். இந்த நாட்டின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும். அதற்கு தான் இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் எச்சரிக்கையாக இருந்தால் தான் அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து விட முடியும்.”
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.