தண்டோரா போடும் பழக்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
கிராமங்களில் கிராம சபை கூட்டம் போன்ற முக்கிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தண்டோரா போடும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது நாம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோம். முன்பு தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் எளிதில் மக்களுக்கு செய்தியை சொல்லும் விதமாக தண்டோரோ போடும் வழக்கம் இருந்தது. தற்போது கைபேசிகளில் வாட்ஸ் குரூப் மூலம் எளிதில் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
எனவே இந்த நவீன காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களிடம் தகவல்களை சேர்க்க வேண்டும் எனவும் தண்டோரா போடும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும் அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வர செய்வதன் மூலம், மூலை முடுக்கெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும். எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவ பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.







