இரவு, பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் பேசியதாவது: திருமண விழா அல்லாமல் மண்டல மாநாடு என்று இவ்விழாவை குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரம்மாண்டமாக தான் செய்வார். தனி முத்திரை பதிப்பார். பிரம்மாண்டத்தை பதிப்பார். அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்குப் பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார். ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்படக்கூடியவர் பி.மூர்த்தி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவெடுத்தோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. மனுக்களை நம்பிக்கையோடு என்னிடம் தருகிறார். மனு அளித்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு தருகிறார்கள். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 100 நாட்களில் 75 சதவித மனுக்களுக்கு தீர்வு எட்டியுள்ளோம். நான் செல்லும்போது யார் மனு வைத்திருந்தாலும் வாங்கிவிடுவேன், மாற்றுத் திறனாளிகள் என்றால் நானே நேரில் சென்று வாங்குவேன்.
மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் திறப்பதற்கான 75 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்டச் சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி என ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணியாற்றி வருகிறோம்.
வீடியோவாக காண : https://www.youtube.com/watch?v=X1XCpjisdlM
AM , PM பாக்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம். திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார். அவருடைய எம்.எல்.ஏ.க்களே அவருடன் பேசுவதில்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதாக புருடா விடுகிறார். அம்மையார் மறைவிற்குப் பின் அனைத்து தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது. எடப்பாடியின் பதவி டெம்ப்ரவரி பதவி தான். பொய் பிரசாரத்தைப் பற்றி கவலை வேண்டாம். அதனைப் பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றார்.
-ம.பவித்ரா