காந்தியின் படம் ரூபாய் நோட்டுகளில் இருப்பதையே ஏற்காதவர்கள் நாங்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால் இங்கு ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பிற்கு, தமிழ்நாட்டில் உளவுத்துறை, காவல்துறை என பலவற்றை வைத்துக்கொண்டு NIA விடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள் அது மாநிலத்தின் சுய அதிகாரத்தை பாதிக்கவில்லையா என கேள்வி எழுப்பினார். ரிஷிகளும் முனிவர்களும் இந்தியாவை உருவாக்கினார்கள் என சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருதார். அதற்கு பதிலளித்த சீமான், ஆங்கிலேயர்கள் என்ன ரிஷியா? எதையாவது பேச வேண்டுமென ஆளுநர் உளறி கொட்டுவதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான் ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களை ஆளுநராக நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறினார். இது போன்ற அதிகாரிகளை ஓய்வு பெற்ற பிறகு ஆளுநராக நியமிக்கிறீர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது. இனிமேல் மக்களுக்காக உழைத்த அரசியல் தலைவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆளுநர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் இந்த கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு, இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளின் கருத்தை நான் ஏற்கிறேன் என தெரிவித்தார்.
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சீமான், மகாத்மா காந்தியையே ரூபாய் நோட்டுகளில் இருக்கக் கூடாது என்ற கருத்தை கொண்டவர்கள் நாங்கள் எனக் கூறினார். ஊழல் லஞ்சம் பெறுபவர்களிடம் லட்சுமி, விநாயகர் துணை போவார்களா ? சாராயக்கடைகளில் சென்று மது வாங்குபவர்களிடமும், கொலை, கொள்ளை செய்பவர்களிடமும் காந்தி சிரித்துக் கொண்டே இருக்கும் நோட்டுகள் செல்வது சரியா எனக் கேள்வியெழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சீமான், ஒரே நாடு, ஒரே மொழி, என வலுக்கட்டாயமாக திணிப்பது சரியல்ல. பல இன,மொழிகள் பேசக்கூடிய நாட்டில் இது பேராபத்தை விளைவிக்கும் என தெரிவித்தார்.