இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

வாக்குப் பதிவு இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த மாதம் மே…

வாக்குப் பதிவு இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த மாதம் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாற்று வாக்குப் பதிவு இயந்திரங்களையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற விவகாரத்தில் தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு வேளச்சேரி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், பணியாளர்கள் உட்பட 4 பேர் ஏப்ரல் 12ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.