தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் வருகிற 27,28-ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் டிச.23 முதல் ஜன.18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெற்ற 979 இடங்களிலும் 23.12.2025 முதல் 18.01.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும். பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் இணைய தளத்திலும் (VOTERS’ SERVICE PORTAL) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதனைப் பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கானப் படிவங்களை இங்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம். படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கிடலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண் 1913ல் தொலைபேசியின் வாயிலாக கேட்டும் தெரிந்து கொள்ளலாம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







