விருதுநகரில் திமுகவுக்கு வாக்களிக்க பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு வாக்கு பதிவாவதாக வாக்காளர்கள் புகாரளித்த நிலையில் 45 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. மதியம் 3 மணி வரையிலான நிலவரப்படி 53.35% வாக்குப்பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 56.80% வாக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது வாக்கை செலுத்துவதற்காக சத்திரிய பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர், அவருக்கு விருப்பமான வேட்பாளருக்கான பட்டனை அழுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மாறாக பாஜக வேட்பாளரின் பட்டனில் லைட் எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. அத்துடன் விருதுநகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தகவலறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு 45 நிமிடம் நிறுத்தப்பட்டது.







