வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்.எல்.ஏ பொன்முடி ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய பொன்முடி, கடந்த 6 நாட்களாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் கழிப்பறை எடுத்துச் செல்வதாக கூறி சிலர் சென்று வருவதாகவும் புகார் தெரிவித்தார். ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் அமைச்சர்கள் போட்டியிடக்கூடிய இடங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இரவு நேரங்களில் சில நபர்கள் சென்று வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வைபை வசதி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொன்முடி கேட்டுக்கொண்டார். திமுக தலைவர் கொடுத்தனுப்பிய புகார் கடிதத்தை வழங்கியிருப்பதாகவும் அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார் எனவும் பொன்முடி தெரிவித்தார்.