சந்திரயானை சாதனையாக்கிய வீர முத்துவேலின் தந்தையை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்..!

சந்திரயானை சாதனையாக்கிய வீர முத்துவேலின் தந்தையை நேரில் சந்தித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’…

சந்திரயானை சாதனையாக்கிய வீர முத்துவேலின் தந்தையை நேரில் சந்தித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சரித்திர சாதனை படைத்துள்ளது.

சந்திரயான் 3 வெற்றி பெற்றதில்  அதன் திட்ட இயக்குனரான வீரமுத்துவேலின் பங்கு இன்றியமையாத ஒன்று. வீர முத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர். சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு விழுப்புரத்தில் உள்ள வீட்டில் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தார்.

அதனை தொடர்ந்து செல்போனில் தனது மகன் வீரமுத்துவேலுக்கு  வாழ்த்து தெரிவித்துவிட்டு சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக தனது உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து வீரமுத்துவேலின் தந்தைக்கு உறவினர்கள் நண்பர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் தெரிவித்ததாவது..

“ எனது மகன் சந்திராயன் 3 திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டதிலிருந்து  வீட்டிற்கு வரவே இல்லை. தனது மகளின் திருமணத்திற்கு கூட வர முடியாது என்று அவர் தெரிவித்த போது இந்தியா தான் முக்கியம் அந்த பணியை செய் என்று கூறினேன். இன்று எனது மகன் சாதனை படைத்தது பெருமிதமாக உள்ளது. உலக நாடுகளே எதிர்பார்த்த நிகழ்வு் வெற்றிகரகமாக நடைபெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது  என  பழனிவேல் தெரிவித்தார்

இந்த நிலையில் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய பழனிவேல் செய்த சாதனைக்கு தமிழக முதலமைச்சர் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததையும் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்ததை மறக்க முடியாத நிகழ்வு என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.