சீர்காழி அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆரப்பள்ளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பகுதிக்கு செல்லவே முடியாத நிலை உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அளக்குடி – கொள்ளிடம் சாலையில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரகாஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததன்பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் கொள்ளிடம் – அளக்குடி இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.