கொரோனா ஒரு பக்கம் பரவலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ’கொரோனா மாதா’க்களும் உருவாகி வருகின்றனர், சில கிராமங்களில்.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தொற்றுப் பரவல், இப்போது குறைந்து வருகிறது. தொற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூரில் சிலர் கொரோனா தேவி சிலையை அமைத்தனர். இந்த கொரோனா தேவிக்கு தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனாவில் இருந்து இந்த தேவி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், இதை அமைத்தனர் இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ’கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சுக்லாப்பூர் என்ற கிராமத்தில், இந்த சிலையை கிராம மக்கள் அமைத்துள்ளனர். சாமிக்கும் முகக்கவசத்தை அணிந்து வடிவமைத்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடமாக மக்களை வதைத்து வரும் கொரோனாவை விரைவில் ஒழிக்க வேண்டும் என்றும் தினமும் புனித நீர் தெளித்து பூஜைகள் செய்தும் வருகின்றனர்.
இந்த கொரோனா மாதாவின் ஆசிர்வாதத்தால், தங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனாவில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்கள் சுக்லாப்பூர் கிராமத்தினர். இதே போல மேலும் சில கிராமங்களிலும் கொரோனா மாதாவுக்கு சிலைகள் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.







