விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் ஒத்திவைப்பு..!

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.  இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜயின்  மக்கள் சந்திப்பு பிரச்சாரமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக தலைமை நிலையச்செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.