தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய்சேதுபதி தற்போது மாஸ் வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். வில்லாதி வில்லன் விஜய்சேதுபதி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
புராண இதிகாசங்கள் தொடங்கி தற்போது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் வரை வில்லன்களை நாம் கொண்டாட தவறியதில்லை. சகுனி என்ற கதாப்பாத்திரம் மட்டும் இல்லை என்றால் மகாபாரதத்தை சிந்தித்து கூட பார்க்க முடியாது. அப்படி வில்லன்களுக்காகவே இங்கு பல ஹீரோக்கள் உருவாகி இருக்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய் சேதுபதி சமீப காலமாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். வில்லன் என்றால் சாதாரண வில்லன் கிடையாது. ஹீரோக்களையே தூக்கி துவம்சம் செய்யும் வில்லாதி வில்லனாக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளார். அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் தான். ஹீரோக்களை கொண்டாடிய நாம் வில்லன்களான பவானியையும், சந்தனத்தை கொண்டாட தவறியதில்லை. ஹீரோக்களை போல வில்லன்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே இதற்கு முக்கிய காரணம்.
ஆரம்பத்தில் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சேதுபதி என ஹீரோவாக நடித்து புகழ் பெற்றாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்கள் தான் தன்னை தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் ஜொலிக்க செய்கிறது என்பதை விஜய் சேதுபதி உணர்ந்து கொண்டார்.
தொடக்கத்தில் எதிர்மறை கதாப்பத்திரங்களில் நடிக்க சற்று தயக்கம் இருந்த போதும் அவரது சூழ்நிலை அவரை விடவில்லை. தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக எடுத்த சில படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் வியாபார ரீதியாக இழப்பை சந்தித்த அவர் தன்னை தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டார். ஆண்டனிகளை எப்போதும் தமிழ் சினிமா கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும் என்பதை உணர்ந்த அவரது பயணம் விக்ரம் வேதா மூலமாக மாறத்தொடங்கியது. அப்படி தன்னுடைய தனித்துவமான வில்லத்தனத்தால் தென்னிந்திய ரசிகர்களை ரசிக்க வைத்த விஜய் சேதுபதி தற்போது வட இந்திய ரசிகர்களையும் கவர புறப்பட்டு விட்டார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் மோத விஜய் சேதுபதி தயாராகி விட்டார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராணா டகுபதி நடிக்க இருந்த முக்கிய கதாப்பத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்த நிலையில் விரைவில் படகுழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பு வெளியான பிறகு வட இந்தியாவையும் மிரட்டுவார் விஜய் சேதுபதி என்பதில் ஐயமில்லை.
– தினேஷ் உதய்