வேங்கைவயல் விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்!

வேங்கைவயல் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான…

வேங்கைவயல் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் கடந்த மார்ச் மாதம், ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து, இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் அரசிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.