புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பாக, 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டன.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சம்பவத்தில் இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள நீா்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போதுவரை 21 பேரிடம் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக 4 சிறுவா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, இதற்காக எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப்பட்டது. மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறாா் நேயக் காவலா் ஆகியோரின் முயற்சியில் ரத்த மாதிரி சேகரிப்பதற்கான தேதியை முடிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை கொடுப்பதற்காக இறையூரைச் சேர்ந்த 3 சிறாா்களும், இறையூரைச் சேர்ந்த ஒரு சிறாா் என 4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இவ்விவகாரத்தில் ஏற்கனவே 21 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.