முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்துள்ளார் திருமாவளவன்.
விசிக சார்பில் ஒவ்வொரு வருடமும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை- இலக்கியம் போன்ற தளங்களில் பங்களித்த தலைவர்கள், அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அந்தவரிசையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அவரின் அறிக்கையில், இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மாநில ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணையம் அமைத்ததற்காகவும், பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்காகவும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிப்பு செய்துள்ளதற்காகவும் அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சருக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெரியாரின் வழியில் சமூகநீதிக்காகத் தொடர்ந்து பாடாற்றிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமாலுக்கும், காயிதேமில்லத் பிறை அல்ஹாஜ் மு. பஷீ்ர் அகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க. இராமசாமிக்கும் வழங்கப்படவுள்ளது.








