காரிமங்கலம் அருகே மெத்தை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி பகுதியில், அந்தோணிசாமி என்பவர் மெத்தை, தலையணை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆலைக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால், தீப்பொறி ஏற்பட்டு, ஆலைக்குள் விழுந்து தீப்பற்றியது. சிறிதுநேரத்தில் ஆலை முழுவதும் மளமளவென தீ பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த மெத்தை தயாரிக்கும் மூலம் பொருட்களான தேங்காய் நார், பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பாகின. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதேபோல், அருப்புக்கோட்டையில் தச்சுப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டில், பீரோ உள்ளிட்ட மர பர்னிச்சர்கள் செய்யும் தச்சுப்பட்டறை இயங்கி வருகிறது. இந்நிலையில், கடையின் கூரையில் தீடீரென தீப்பிடித்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் தேக்கினால் செய்யப்பட்ட கட்டில், பீரோ உள்ளட்ட சுமார் 4 லட்சும் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் சேதமடைந்தன. துவாக்குடி செடிமலைமுருகன் கோயில் தெருவில் உள்ள பழனி என்பவரின் குடிசை வீடு தீடீரென தீப்பற்றியது. அருகில் இருப்பதும் குடிசை வீடு என்பதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாக தீ பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைந்தனர். எனினும், இந்த விபத்தில் 9 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வட்டாட்சியர் செல்வகணேஷ், வேஷ்டி, சேலை, அரிசி, ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.







