வாரணாசி ; ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.   உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி…

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

 

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, வாரணாசி நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்றும் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்தார். மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு என வாதாடினார்.

 

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இதனால் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், வாரணாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.