அதிமுக அலுவலக சாவி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி…

அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. மேலும் அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து எழுந்த புகாரின் பேரில், அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக தலைமை அலுவலகத்தில் சீல் அகற்றப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க முடியாது என மறுத்து விட்டது.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை எனவே, அவர் அதிமுகவின் அதிகார உரிமையை கோர முடியாது என்றும், ஓபிஎஸ்-யை பொறுத்தவரை பணம் கையாடல் செய்திருக்கிறார். கையாடல் நடத்தியுள்ள ஒருவரிடம் எப்படி அலுவலக சாவியை ஒப்படைக்க முடியும். எனவே, ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற வழக்கு வந்தபோது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை இன்று நடத்தப்பட உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.

வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளனர். அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஜூலை 20ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஒரு மாதம் வரையில் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீக்கப்பட்டு அதிமுக அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.